Last Updated:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரிக்கும் பணியில் 2022ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது. 140 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன.
இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை முறையில் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 பயணிகள் பெட்டிகளுடன் உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றுள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், அந்த வழித்தடத்தில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,600 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். 3,200 குதிரைத்திறன் கொண்ட உந்துவிசை அமைப்புடன், உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த ரயில்களில் 2 அல்லது 3 பயணிகள் பெட்டிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


