India
oi-Nantha Kumar R
டேராடூன்: வடமாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது நண்பனை பிச்சைக்காரராக நடிக்க வைத்தார். பிச்சைக்காரராக வாழ்ந்தால் ஒருநாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? பொதுமக்களுக்கு உதவும் குணம் உள்ளதா? என்பதை அறிய இதனை சோஷியல் எக்ஸ்பிரிமெண்ட்டாக அவர் செய்தார். இறுதியில் 8 மணிநேரத்தில் அவர்களுக்கு யாசகமாக கிடைத்த பணம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

தற்போது சிறுவர், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் யூடியூப் சேனல் தொடங்கி உள்ளனர். இதில் சிலர் சோஷியல் எக்ஸ்பிரிமெண்ட் செய்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வடமாநிலத்தை சேர்ந்த யூடியூபர் புருஷோத்தம் வாஷிஷ்ட் தனது நண்பர் சச்சின் உடன் நடத்திய சேஷியல் எக்ஸ்பிரிமெண்ட் தொடர்பான வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நம் நாட்டில் பிச்சைக்காரராக வாழ்ந்தால் ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?, தனியார் – அரசு ஊழியர்களை விட அதிகம் சம்பாதிக்க முடியுமா? பிச்சைக்காரர்களை பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்கள்? பொதுமக்களுக்கு உதவும் குணம் உள்ளதா? என்பதை அறியும் வகையில் இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். அதன்படி யூடியூபர் புருஷோத்தம் வாஷிஷ்ட் தனது நண்பர் சச்சினை பிச்சைக்காரர் போல் நடிக்க வைத்தார்.
சச்சின் கிழிந்த உடை அணிந்து, முகத்தில் கரியை பூசிக்கொண்டிருந்தார். கையில் சிறிய பாத்திரம் ஒன்றை ஏந்தி கொண்டு, கழுத்தில் யுபிஐ ஸ்கேனரையும் அவர் அணிந்திருந்து யாசகம் கேட்க தொடங்கினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரியில் நடந்த காவத் மேலா எனும் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களை சந்தித்து சச்சின் யாசகம் கேட்டார். ஒரு நாளில் ரூ.1,000 அல்லது ரூ.2,000 வரை கிடைக்கும் என்று நினைத்து அவர்கள் இந்த முயற்சியில் இறங்கினர்.
முதல் ஒரு மணி நேரம் நடமாடியபடி சச்சின் பிச்சை கேட்டார். ரூ.130 மட்டுமே கிடைத்தது. பலரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் சச்சின் உண்மையான பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து யாசகம் கோரினார். 4 மணிநேரத்தில் ரூ.800 கிடைத்தது. இந்த சமயத்தில் அங்கிருந்த காவலர்கள் அவர்களை விரட்டியடித்தனர். ஆனாலும் சச்சின் விடவில்லை. கொட்டும் மழையிலும் நடமாடி பிச்சை கோரினார். கடைசியாக 8 மணிநேரத்தில் அவருக்கு ரூ.4 ஆயிரம் வரை யாசகமாக கிடைத்தது.
அதுமட்டுமின்றி இந்த ரூ.4 ஆயிரம் யாசகம் பெறுவதற்கு பின்னால் உடல் மற்றும் மனரீதியாக உள்ள பிரச்சனைகளையும் அவர்கள் விவரித்தனர். பிச்சை எடுப்பதும் கஷ்டமான விஷயம். ஒவ்வொரு மக்களையும் தனித்தனியாக அணுகுவது கடினமானது. இதுசோர்வை ஏற்படுத்தும். இதனைபார்த்து யாரும் பிச்சை எடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம். நேர்மையாக உழைத்தாலே போதும். அதில் கிடைக்கும் பணம் நிம்மதியை தரும் என்று வீடியோவை முடித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளில் பிச்சை எடுத்தால் ரூ.4 ஆயிரம் வரை கிடைக்கும் என்றால் மாதத்துக்கு ரூ.1.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படிக்க வேண்டாம். உழைக்க வேண்டாம் எளிதாக மாதந்தோறும் லட்சத்தில் சம்பாதிக்கலாமே என்று பலரும் கூறி வருகின்றனர்.

