Tamilnadu
oi-Nantha Kumar R
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தவெக மாவட்ட இணை செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் வாக்ககுவாதம் செய்து மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அப்போது ”நீங்கள் நல்லாவே இருக்கமாட்டீங்க.. நடுத்தெருவிற்கு தான் போவீங்க” என்று மாவட்ட இணை செயலாளருக்கு, ஒன்றிய செயலாளர் சாபமிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளராக பிரைட்டர் என்பவர் இருந்து வருகிறார். இவருடன் ஒரு சில ஒன்றிய செயலாளர் சேர்ந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளராக போட்டியிட்ட ஜேகேஆர். முருகன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் என நிர்வாகிகள் தனி அணியாகவும் இயங்கி வருகின்றனர்.
இப்படியாக திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் தவெகவினர் இடையே கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் தான் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி அடுத்த நங்கைமொழி பகுதியில் உடன்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட இணை செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் நடந்துள்ளது. உடன்குடி மேற்கு ஒன்றியத்தில் நிகழ்ச்சி நடந்தாலும் கூட அந்த ஒன்றிய செயலாளர் விஜயராஜ்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் விஜயராஜ் கோபமானார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த விஜயராஜ் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விஜயராஜ், ”எனது பகுதிக்கு வரும்போது என்னிடம் எப்படி தகவல் சொல்லாமல் வரலாம். கூட்டம் நடத்தலாம்” என்று கேட்கிறார்.
அதற்கு ஆனந்த், ”மாவட்டம் முழுவதும் நான் வரலாம்” என்று பதிலளிக்கிறார். இதையடுத்து விஜயராஜ், ”தப்பு செய்கிறீர்கள். இதுவேறு மாதிரி போய்விடும். தலைமை முறையாக அறிவித்த ஒன்றிய செயலாளர் நான். இப்படி தான் தளபதி கட்சியை பிளவுப்படுத்த சொன்னாரா?” என ஆவேசமானார்.
அதோடு, ”நீங்க அனிதாவின் (திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்) கைக்கூலியாக நீங்கள் செயல்படுகிறீர்கள். ஊருக்கு 10 பேரை சேர்த்துகிட்டு இப்படி செய்கிறீர்கள். நீங்கள் நல்லாவே இருக்கமாட்டீங்க.. நடுத்தெருவிற்கு தான் போவீங்க” என்று ஆக்ரோஷமாக கூறிவிட்டு சென்றார். திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் இருபிரிவினராக வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

