கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், தனது நிபந்தனையுடன்கூடிய அரச மன்னிப்பின் கீழ் விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவும் வகையில் தொடங்கப்பட்ட ‘நஜீப் ரசாக் ஆதரவு நிதி’ (Najib Razak Solidarity Fund), தொடங்கப்பட்ட ஒரே மணி நேரத்தில் RM165,645 வசூலித்துள்ளதாக அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்தி டுசுகி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த நிதி திரட்டும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெருமளவில் நிதி வழங்கி வருகின்றனர்.
“அல்ஹம்துலில்லாஹ், தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் நஜீப் ரசாக் ஆதரவு நிதி RM165,645-ஐ எட்டியுள்ளது. நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.” என்று, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்தி டுசுகி தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் நஜீப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவது மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நஜீப் தனது எஞ்சிய சிறைக்காலத்தை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுச் சிறையில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த மன்னிப்பு நடவடிக்கை ஊழலுக்கு எதிரான அரசின் உறுதியான நிலையை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும், நஜீப் தொடர்பான பிற வழக்குகள் சட்டப்படி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தினார்.
MCA கட்சி மன்னரின் இந்த முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ள வேளையில், 1MDB வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் வரி செலுத்துவோரின் சுமையை மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள DAP கட்சி, இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ நிலையைத் தீர்மானிக்க அவசர மத்திய செயற்குழு (CEC) கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.



