கூலாய், ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் விடுதலைப் பிரச்சினையை அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசியல்மயமாக்குவதை விடுத்து, மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
டத்தோஶ்ரீ நஜிப் இப்போது சிறையில் இருக்கிறார். எனவே அவரைத் தனியாக விட்டுவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனால் நாம் இன்னும் (1MDB) கடனைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம்… அதை இன்னும் முழுமையாகச் செலுத்தி முடிக்கவில்லை என்று இன்று இங்கு நடைபெற்ற ‘Yok! Merahkan Johor! Undi Harapan ‘ நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறினார்.
பொறுப்பற்ற தரப்பினரால் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்காவிட்டால், பொது வசதிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய 51 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 1MDB கடன்களால் அரசாங்கம் தற்போது சுமையாகியுள்ளது என்று அன்வர் கூறினார்.1MDB கடனைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் அந்தப் பணம் நம்மிடம் இருந்திருந்தால், அதை நாம் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் ஏழைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது நம்மால் அது முடியாது என்றும் அவர் கூறினார்.



