
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார். கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த சடலத்தை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அவர் தனது தோட்டத்தில் வேலை செய்து முடித்து அங்குள்ள குடிசையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
குடிசையில் அவர் இரத்தத்தில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்ததை கவனித்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம். ரியாஸ் தலைமையிலான குழு ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டது.
பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் குமார் மற்றும் தடயவியல் பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
