Last Updated:
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களும், திலக் வர்மா 18 ரன்களும் சேர்த்தனர். ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக பேட்டிங் செய்து 28 பந்துகளில் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
லியாம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர உதவினார். மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 5 பவுண்டரியுடன் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களும், திலக் வர்மா 18 ரன்களும் சேர்த்தனர். ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.
January 28, 2025 11:09 PM IST


