தொடரும் CJP போராட்டம்.. மௌனம் கலைத்த பிரதமர் மோடி..!! நீட் தேர்வு குறித்து என்ன சொல்லி இருக்காரு?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி மௌனம் கலைத்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சிறிய அளவில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது.

குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி நாள் தோறும் ஆயிரக்கணக்கான இளஞர்கள் மற்றும் மாணவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தன்னையும் இணைத்து கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே 20ஆம் தேதி அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுக்க தடியடி நடத்தப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்தது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரதமர் இல்லம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தற்போது டெல்லி மட்டுமில்லாமல் சென்னை, ஐதராபாத், கொச்சி என பல பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டம் தொடர்கிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை அடுத்து டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே வேளையில் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

மத்திய அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து மோடி மௌனம் கலைத்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
— Narendra Modi (@narendramodi) July 23, 2026 “>
“இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க யார் முயற்சி செய்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை இளைஞர்கள் ஏற்பார்களா அல்லது போராட்டத்தை தொடர்வார்களா என்பது இனி தான் தெரிய வரும்.

