Last Updated:
“எரிவாயு விலை தற்போது உயர்ந்துள்ள சூழலில், அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும்” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ. 990.50 உயர்ந்துள்ளதைக் கண்டித்துள்ள ராகுல் காந்தி, “பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ரூ. 1,380 விலை உயர்ந்துள்ளது. வெறும் 3 மாதங்களில் ஏற்பட்ட பிரம்மாண்டமான 81% அதிகரிப்பு இது.” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 990.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 990.50 ரூபாய் உயர்ந்து 3,237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே போர் காரணமாக ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
कह दिया था – चुनाव के बाद महंगाई की गर्मी आएगी।
आज कमर्शियल गैस सिलेंडर ₹993 महंगा। एक ही दिन में सबसे बड़ी बढ़ोतरी। यह चुनावी बिल है।
फरवरी से अब तक: ₹1,380 की बढ़ोतरी – सिर्फ़ 3 महीनों में 81% का इज़ाफ़ा।
चायवाला, ढाबा, होटल, बेकरी, हलवाई – हर किसी की रसोई पर बोझ बढ़ा। और…
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2026
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதன்படி இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ₹993 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே. இதுதான் தேர்தல் கட்டணம்.
பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ரூ. 1,380 விலை உயர்ந்துள்ளது. வெறும் 3 மாதங்களில் ஏற்பட்ட பிரம்மாண்டமான 81% அதிகரிப்பு இது. தேநீர் கடைகள், தாபாக்கள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என அனைவரின் சமையலறையின் மீதும் சுமை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உங்கள் உணவுத் தட்டின் மீதும் எதிரொலிக்கும்.
முதலில் எரிவாயுவின் மீதான ஸ்ட்ரைக் நடந்துள்ளது அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஸ்ட்ரைக் நடக்கும் (எரிவாயு விலை தற்போது உயர்ந்துள்ள சூழலில், அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும்)” எனத் தெரிவித்துள்ளார்.


