தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்
11ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்
சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம
தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி
வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 2026.05.11ஆம்
திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு அவரால் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீதியினை தடுத்து எல்லையிடப்பட்டுள்ள
இடப்பரப்புக்குள் வதியும் தங்களிற்கு 1987ஆம் ஆண்டின 15ம் இலக்க பிரதேச சபைகள்
கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவிற்கமைவாக அறிவித்தல் இத்தால்
வழங்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையிட்ட இடப்பரப்பு
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
“இதன்படி வீதியினை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும்
ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும்
2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

தவறும் பட்சத்தில், 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள்
கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், சட்டத்தின் 59(3)ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கு அமைவாக அகற்றப்படும்
செலவீனங்கள் தங்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி சட்டநடவடிக்கைகளுக்கும் தாங்கள் உட்பட நேரிடலாம் என்பதனையும்
அறியத்தருகின்றேன்” என கூறப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச
செயலாளர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தையிட்டி காணி அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பவானி வீதி
தவிசாளரால் அடையாளம் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

