தெரங்கானு சுகாதாரத் துறை, ஆவணங்கள் உள்ள மற்றும் ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்களிடையே மலேரியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து உள்ளது.
இந்த அதிகரிப்பு முதலில் மே மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டதாக அந்தத் துறை கூறியுள்ளது. இதுவரை மொத்தம் 13 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 11 பேர் ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்கள் மற்றும் இருவர் ஆவணங்கள் உள்ள குடியேறியவர்கள் ஆவர்.
“தொற்றுநோயியல் விசாரணையில் இவர்கள் வெளிநாட்டில் இருந்தபோதே தொற்றுக்கு ஆளானது கண்டறியப்பட்டதால், இந்த 13 நோயாளிகளும் வெளிநாட்டில் இருந்து தொற்றுடன் வந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த 13 பாதிப்புகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, தொற்று பரவும் சங்கிலி உடைக்கப்பட்டதால், உள்ளூர் மக்கள் எவருக்கும் மலேரியா தொற்று ஏற்படவில்லை,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் மலேரியா பாதிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட, ஜூன் 3 அன்று ஒரு உள் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதையும் இத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் நோயாளிகள் சுகாதார நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய் பரப்பும் காரணி (கொசுக்கள்) கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து நோயாளிகளும் தங்களது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
-fmt
