Tamilnadu
oi-Vignesh Selvaraj
தென்காசி: தென்காசியில் இருந்து நெல்லை சென்ற பேருந்து இன்று காலை 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் அரசு பேருந்து இன்று வேட்டைக்காரன் குளம் பகுதியில் அருகே பாலத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் தென்காசு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக தென்காசி – நெல்லை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து குற்றாலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


