Sports
oi-Yogeshwaran Moorthi
பாஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிர்ச்சியைப் பராகுவே அணி உலகிற்கு கொடுத்துள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் அசுர பலம் கொண்ட முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி பராகுவே வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்விகளில் ஒன்றாக இந்த ஆட்டம் மாறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே நட்சத்திர வீரர்களைக் கொண்ட ஜெர்மனி அணிக்கு பராகுவே வீரர்கள் தங்களது அசாத்திய தடுப்பாட்டத்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். இதனிடையே 42வது நிமிடத்தில் பராகுவே அணியின் ஜூலியோ முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதனால் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே ஜெர்மனி அணியின் காய் ஹாவர்ட்ஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதன்பின் பராகுவே அணி வீரர்கள் டிஃபென்ஸில் அதிக கவனம் செலுத்தினர்.
அதேபோல் ஜெர்மனியின் கடுமையான தாக்குதல்களை பராகுவேயின் கோல்கீப்பர் மற்றும் தடுப்பாட்ட வீரர்கள் உயிரைக் கொடுத்து தடுத்த விதம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 90 நிமிடங்கள் முடிவடைந்த சூழலில், கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கால்பந்து உலகமுமே நகம் கடித்தபடி காத்திருந்தது. அழுத்தங்களை மிக நேர்த்தியாகக் கையாண்ட பராகுவே வீரர்கள், ஜெர்மனியின் கோல்கீப்பரை ஏமாற்றி பந்துகளை வலைக்குள் தள்ளி கோல் ஆக்கினர்.
மறுபுறம், உலகக்கோப்பைகளில் பெனால்டி ஷூட்-அவுட்களில் மிகச்சிறந்த சாதனை வைத்துள்ள ஜெர்மனி அணி, இந்த முறை அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது அதிர்ச்சி அளித்தது. இறுதியில் பராகுவே அணி 4-3 என்ற கணக்கில் ஷூட்-அவுட் முறையில் ஜெர்மனியை வீழ்த்தி மைதானத்தைக் கொண்டாட்டக் கடலாக மாற்றியது.
உலகக்கோப்பையைக் கைப்பற்றும் அணிகளில் முதன்மையானதாகக் கருதப்பட்ட ஜெர்மனி, நாக்அவுட் சுற்றில் அடைந்த அதிர்ச்சி தோல்வியால் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. கால்பந்து தரவரிசையில் தங்களை விடப் பின்தங்கியுள்ள ஒரு அணியிடம் ஜெர்மனி தோற்றிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ‘டேவிட் vs கோலியாத்’ சண்டையைப் போல ஜாம்பவான் அணியைச் சாய்த்த பராகுவே அணியின் இந்த அசாத்திய வீரியத்தை ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் பாராட்டி வருகிறது.

