Sports
oi-Shyamsundar I
நியூயார்க்: கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகக் கொண்டாடப்பட்ட லியோனல் மெஸ்ஸி, தற்போது பல ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளார். காரணம்.. மெஸ்ஸியின் பேராசை!
அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், கால்பந்து விமர்சகர்களும் ரசிகர்களும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அன்றே ஓய்வு பெற்றிருக்கலாமே மெஸ்ஸி!
மெஸ்ஸி.. நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2022 கத்தார் உலகக்கோப்பையின் போதே கௌரவமாக ஓய்வு பெற்றிருக்கலாம்.. என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். கத்தார் உலகக்கோப்பைக்கு முன்பாக அர்ஜென்டினா அணிக்கும் மெஸ்ஸிக்கும் ஆதரவாக உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அனுதாப அலை உருவாக்கப்பட்டது.
மெஸ்ஸி தனது வாழ்நாளில் ஒருமுறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஆக்கிரமித்திருந்தது.
அந்த உணர்ச்சிப் பெருக்கில், மெஸ்ஸிக்கும் அவரது அணிக்கும் ஆதரவாக நடுவர்கள் செயல்பட்டதாகவும், பல சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்புகள் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாகவும் எழுந்த புகார்களை உலகம் கண்மூடித்தனமாகப் புறக்கணித்தது.
நீங்கள் ஒரு திருடன் போல மற்றவர்களின் வெற்றியைத் திருடுகிறீர்கள் என்ற உண்மையை அன்றைய உணர்ச்சி, மெஸ்ஸி மீது இருந்த அன்பு மறைத்துவிட்டது. அந்த சீசனில் கோப்பை வென்ற பின் அவர் விலகியிருந்தால், ஒரு மாபெரும் நாயகனாக விடைபெற்றிருக்கலாம். ஆனால், பேராசை யாரைத்தான் விட்டது.. அவரையும் விடவில்லை.
வெறுப்புடன் விடைபெறும் அர்ஜென்டினா அணி
2026 உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் ஆட்டம் மிகவும் மோசமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருந்தது. எகிப்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியிலேயே அர்ஜென்டினா தோற்க வேண்டியது. ஆனால் அந்த ஆட்டத்தை அர்ஜென்டினா ஏமாற்றி வென்றதாக புகார்கள் உள்ளன.
அதிலும் அடிதடி எல்லாம் செய்துதான் கடைசி நேரத்தில் அவர்கள் வெல்லவே செய்தனர். நேற்று இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக எந்த ஒரு வியூகமும் இல்லாமல், எதிரணி வீரர்களை ஆக்ரோஷமாகத் தாக்குவதையே அவர்கள் Full-time தொழிலாகக் கொண்டிருந்தனர்.
கடைசிவரை கோல் அடிக்க விடாமல் அடிக்க வேண்டும்.. அதன்பின் ஷூட் அவுட் நடந்தால் அதில் வென்றுவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது மற்றும் போட்டியின் முடிவில் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களைத் தாக்கியது போன்ற செயல்கள் அர்ஜென்டினாவின் அநாகரிக முகத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
தற்போது ஒட்டுமொத்த உலகமும் உங்களையும், ஏமாற்றி ஆடக்கூடிய அர்ஜென்டினா தேசிய அணியையும் வெறுக்கிறது. ஒரு திருடன் ஒரு பொருள் கிடைத்ததும் விட மாட்டான்.. மீண்டும் மீண்டும் திருடுவான்.. திருடன் எப்போதும் பேராசைதான் படுவான்.. அதற்கு நீங்களே சாட்சி” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பேராசை
39 வயதான மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பையில் 8 கோல்களை அடித்திருந்தாலும், இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர்களின் வேகத்திற்கு முன்னால் திணறினார். அர்ஜென்டினா அணி 10 வீரர்களாகக் குறைந்த போதும் நேர்மையாக ஆடாமல்.. சுயநலத்துடன் விளையாடியது அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கால்பந்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2016ல் இதே மைதானத்தில் சிலியை எதிர்கொண்டு தோற்றபோது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மீண்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டார் மெஸ்ஸி. அந்த நாடகம் இப்போதும் தொடருமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மெஸ்ஸி மீதான அன்பின் பின்னால் மறைந்திருந்த அர்ஜென்டினாவின் அயோக்கியத்தனம் இந்த 2026 உலகக்கோப்பை தோல்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது. கௌரவமாகப் போக வேண்டிய மெஸ்ஸியின் பெயர், இப்போது ஒரு திருடன் என்ற அவப்பெயருடன், பல கோடி கால்பந்து ரசிகர்களின் வெறுப்போடு முடிவுக்கு வந்துள்ளது.

