Last Updated:
அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா உட்பட 5 முக்கிய மசோதாக்கள் தாக்கலாகவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதனால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி என்ற பெயரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அந்தக் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்ததற்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அவர்களுக்கு எப்படி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினார். அதன்பின் சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.


