சென்னை, அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர்.
இந்த நிலையில், தவெகவில் இணையும் அதிமுகவினர் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
சினிமாவில் பிரபலம் என்பதால் விஜய்க்கு தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. அதிமுக, திமுக கையில்தான் மக்கள் கடிவாளத்தை கொடுத்துள்ளனர். திமுக தயவில் வெற்றி பெற்றவர்கள் ஆதரவோடுதான் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்தப் போகிறார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மாற்றினால் எல்லாம் சரியாகும் என இவர்கள் சொல்வது அவர்களது தவறை மறைக்க போடும் நாடகம். தமிழக கட்சிகளிடையே நடந்து வரும் குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே விஜய்தான். அதற்கு அமமுக வேட்பாளரை பேரம் பேசியதே சாட்சி.
மதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் விஜய் பதவி விலகச் சொன்னது அப்பட்டமான குதிரை பேரம்தான்.துரை வைகோ வெற்றிக்கு திமுகதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.



