தலைவர் பிரபாகரன் அவர்களது நினைவெழுச்சி தொடபான சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பிப்பொன்று நேற்று (05.03.2025) புதன்கிழமை இடம்பெற்றது.
இணையவழியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு ‘மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்’ ஊடகப்பிரிவு இணைப்பாளர் அறிவுமணி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
‘மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்’ நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அகவத்தின் செயலாளர் புரட்சி அவர்கள் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டவிருந்த காணொளி இணையவழியில் காண்பிக்கப்பட்டது.
அடுத்து கேள்வி – பதிலுக்கான நேரம் வழங்கப்பட்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் அகவத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களில் ஒருவரான இளங்குட்டுவன் வழங்கினார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வாண்டு எட்டாம் மாத முற்பகுதியில் ஒருங்கிணைந்து ஐரோப்பாவில் ஒரு நாட்டிலும் சம நேரத்தில் தாயகம், தமிழகம் உட்பட ஏனைய நாடுகளிலும் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு இடம்பெறும் என்றும் அது தொடர்பான அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நிகழ்த்துவது தொடர்பாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சந்திப்பின் இறுதியில் தெளிவுபடுத்தலுடன் கூடிய தொகுப்புரையினை, ‘மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்’ தற்போதைய இணைப்பாளர் சங்கீதன் வழங்கினார்.
தொகுப்புரையின் போது தேசிய தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வின் ஆரம்ப பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நகர்ந்து செல்லும் என்பது பற்றியும் ஊடகவியாளர்களாக விடயங்களை மக்கள் மத்தியில் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு உறவுகளிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், திட்டமிடப்பட்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வினை அதி உச்சமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்துவதற்கு உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளின் ஒத்துழைப்பினையும் அவர் கேட்டுக் கொண்டார்.

