கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற “பறவி சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் நாட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, அதில் அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் என்ற போதைப்பொருள் கடத்தல் காரர்களளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட கொள்கலன் மொராக்கோவிற்கு மறுஏற்றுமதி செய்யத் தயாராக இருந்ததாக அறிக்கைகள் கூறினாலும், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவரவே திட்டமிட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.
தொழிலதிபர் கைது
வெளிநாட்டிலுள்ள ஒரு தனியார் தகவல் வழங்குநர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இச்சோதனையை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளின் போது, இப்போதைப்பொருள் இருப்பு ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சசிதரன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னணியில் பாகிஸ்தான் நாட்டவர்கள்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு பாகிஸ்தானியர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவரவே, ஜம்பாட்டா வீதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த அவ்விரு பாகிஸ்தான் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதனைதொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தெமட்டகொட தொழிலதிபரின் நிறுவனம் மூலமாகவே மேற்படி போதைப்பொருளை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

