Last Updated:
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது என கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மழை இல்லாததால் அணைகள் நிரம்பவில்லை.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை எனவும், தற்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது என்றும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடி பருவம் தொடங்கியுள்ள நிலையில், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5 லட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற நடவுப் பணிகளில் நடப்பாண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 3 லட்சம் ஏக்கர்களாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93 ஆயிரத்து 470 மில்லியன் கனஅடி நீர் என்ற நிலையில், தற்போது 38 ஆயிரத்து 359 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே கையிருப்பு உள்ளதால், நீர் திறக்க முடியாத நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சீர்செய்ய காவிரியில் கர்நாடகாவிலிருந்து நீரை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், அணைகள் நிரம்பவில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு தற்போதைக்கு நீர் தர இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு நீர் தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை என்றும் கர்நாடகாவில் நீர் இல்லை என்பது ஆணையத்துக்கே தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு குறித்து மழை பெய்வதைப் பொறுத்தே சொல்ல முடியும் எனவும் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
Jul 09, 2026 10:21 PM IST


