தமிழ்நாடு, கர்நாடாக, ஆந்திராவை விட்டு தெலுங்கானாவுக்கு போன TCS.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.70000 கோடி மெகா திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஐடி சேவை துறையில் பெரிய வர்த்தக பாதிப்பு ஏற்படும் காரணத்தால் இப்பிரிவில் மாற்று வர்த்தகத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஐ டேட்டா சென்டர் உருவாக்க HyperVault என்ற நிறுவனத்தை உருவாக்கியது.
டிசிஎஸ்-ன் இந்த முயற்சியை மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்ட நிலையில் இந்நிறுவனம் தனது மாபெரும் டேட்டா சென்டருக்கான இடத்தை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் டெக் துறையில் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, கர்நாடகாவை விட்டுத்தள்ளிவிட்டு தெலுங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தில் சுமார் 70000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1 ஜிகாவாட் திறன் கொண்ட ஏஐ டேட்டா சென்டரை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதான் இந்தியாவிலேயை ஏஐ உள்கட்டமைப்புக்காக முதலீடு செய்யப்படும் மிகப்பெரிய தொகையாகும்.
இப்புதிய டேட்டா சென்டர் அமைப்பதற்காக டிசிஎஸ் சுமார் 264 ஏக்கர் நிலத்தை ஹைதராபாத்தில் புதிதாக உருவாகும் ஸ்மார்ட் சிட்டி பகுதியான Future City-யில் பெற்றுள்ளது. இங்கு டிசிஎஸ் மிகப்பெரிய டேட்டா சென்டர் கேபம்ஸ் உருவாக்கி, உலகின் முன்னணி ஏஐ சேவை நிறுவனங்களுக்குக்கு சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் ஏஐ டிரைனிங் முதல் பல்வேறு சேவைகளை அளிக்க உள்ளது.
இந்த டேட்டா சென்டரில் வெறுமென ஐடி, டெக் வேலைவாய்ப்புகள் மட்டும் அல்ல, ஒரு டேட்டா சென்டரில் மின்சாரம், கூலிங், நெட்வொர்க்கிங், கட்டுமானம், இன்ஜினியரிங், டேட்டா சென்டர் ஆப்ரேஷன்ஸ் என பல பரிவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதில் நேரடியாகவும், முறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை பெற உள்ளனர்.
இந்த மாபெரும் திட்டம் குறித்து தெலுக்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், ஜூன் 2ஆம் தேதி தான் டிசிஎஸ்-யிடம் டேட்டா சென்டர் அமைப்பது குறித்து கேட்ட நிலையில் இத்திட்டம் 3 மாதத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த டேட்டா சென்டர் அடிக்கல் விழாவில் இருந்து வெறும் 24 மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். மேலும் இந்த டேட்டா சென்டர் மூலம் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெலுங்கானா ஐடி அமைச்சர் டி.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனம் ஏஐ துறையில் புதிய வர்த்தகத்தை பெற வேண்டும் என்பதை திட்டமிட்டு கடந்த ஆண்டு ஐடி சேவை துறையை தாண்டி டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில் இறங்குவதாக அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 5-7 வருடத்தில் இந்தியாவில் 1 முதல் 1.2 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பெரிய திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் டிசிஎஸ், அமெரிக்காவின் பிரபல தனியார் முதலீட்டு நிறுவனமான டிபிஜி (TPG) உடன் இணைந்து புதிய கூட்டணி நிறுவனம் ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிவித்து ஹைப்பர்வால்ட் ஏஐ டேட்டா சென்டர் லிமிடெட் (HyperVault AI Data Centre Ltd) என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் டிசிஎஸ் கீழ் துணை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த துணை நிறுவனத்தில் டிசிஎஸ் 51 சதவீத பங்குகளையும் டிபிஜி 49 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். இரு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 2 பில்லியன் டாலர் பங்கு முதலீட்டை செய்யும். மீதமுள்ள 4.5 முதல் 5 பில்லியன் டாலர் கடன் வழியாக படிப்படியாக திரட்டப்படும் என கூறப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்திற்கு தற்போது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் முதல் வாடிக்கையாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹைதராபாத்தில் அமைக்கப்படும் டேட்டா சென்டர் மூலம் ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு சேவை அளிக்க உள்ளது.
