தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-விற்குள் தற்போது பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு(தவெக) ஆதரவளிப்பது தொடர்பாக, அதிமுக-வின் 35-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் இரகசிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.கவுடன் கூட்டணிக்கு வலியுறுத்து
இந்திய ஊடகமொன்று வெளியிட்ட செய்தியின்படி மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகத்தைச் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்துக் கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், தவெக-விற்கு ஆதரவளிப்பதன் மூலம் திராவிட எதிர்ப்பு ஓட்டுகளை ஒருமுறைப்படுத்தலாம் என்பது இவர்களின் வாதமாகும்.
விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு சாதகம்
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஏற்கனவே உறுதி செய்துள்ள தவெக, தற்போது இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிருப்தி நிலை, விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்குச் சாதகமாக அமையக்கூடும்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், அதிமுக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் ஒரு பிளவிற்கு வழிவகுக்குமா அல்லது தவெக-வுடன் ஒரு புதிய மெகா கூட்டணி உருவாகுமா என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

