Last Updated:
மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் நகரங்களுக்கு இடையேயான நேரடி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே நட்புறவின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. வியட்நாம் அதிபர் டோ லாம் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி, இரு நாடுகளுக்கும் இடையே வங்கி, கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரண்டு மடங்காக அதிகரித்து, தற்போது 16 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலராக உயர்த்துவதே இந்த புதிய ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு வியட்நாம் சந்தையில் மருந்துகளை விற்பனை செய்வதற்கான வழிவகை எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறையிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் திராட்சை மற்றும் மாதுளை பழங்கள் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. பதிலுக்கு, வியட்நாமின் புகழ்பெற்ற டுரியன் மற்றும் பொமலோ (Pomelo) பழங்கள் இந்தியச் சந்தைக்கு வரவுள்ளன.
தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை முறை மற்றும் வியட்நாமின் அதிவேக பணப்பரிவர்த்தனை அமைப்பு (Fast Payment System) ஆகியவற்றை இணைக்க இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும், முக்கியமான தாதுக்கள் மற்றும் எரிசக்தித் துறையில் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தியா-ஆசியான் வர்த்தக ஒப்பந்தமான ‘ஐடிகா’ (AITIGA) இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்படும் என்றும், இது ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் நகரங்களுக்கு இடையேயான நேரடி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
May 06, 2026 10:06 PM IST


