கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2 (KLIA2)-இல் தரையிறங்கிய விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், 17 முதல் 25 வயதுடைய வாலிபர் ஒருவருடையது எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
இன்று காலை 6:30 மணியளவில் ஜப்பானின் டோக்கியோ நகரிலிருந்து வந்து தரையிறங்கிய அந்த விமானத்தின் வலதுபுறச் சக்கரப் பகுதியை (Wheel well) ஆய்வு செய்த பொறியியல் பிரிவு ஊழியர்கள், அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து சோதனையிட்ட போது குப்புறப் படுத்த நிலையில் சடலம் ஒன்றைக் கண்டறிந்தனர்.
காலை 7:00 மணியளவில் விமான நிலைய செயல்பாட்டு மையத்திடமிருந்து (AOCC) தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததோடு, அவரிடமிருந்து எவ்வித அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை என்று KLIA மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் எம். ரவி கூறினார்.
உடல் அளவைக் கொண்டு பார்க்கும்போது 17 முதல் 25 வயது வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்பக்கம் எழுத்துக்களும் பின்பக்கம் படமும் அச்சிடப்பட்ட வெள்ளை நிற ‘ஹூடி’ (Hoodie) சட்டை, வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், பழுப்பு நிறத் தோல் வார்ப்பட்டை (Belt), கருப்பு நிற காலுறைகள் (Socks) மற்றும் விளையாட்டுச் காலணிகளை (Sports shoes) அவர் அணிந்திருந்தார்.
அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகச் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சம்பவம் திடீர் மரணம் (Sudden Death Report – SDR) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் பொதுமக்கள் எவ்வித வதந்திகளையோ அல்லது ஆதாரமற்ற தகவல்களையோ பரப்ப வேண்டாம் எனக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் KLIA மாவட்டக் காவல் தலைமையகத்தை (03-8776 8222) தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



