International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்த மோதல் இடைக்கால அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்திருந்தது. நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பாக சுவிடர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அதில் இருந்து பாதியிலேயே ஈரான் வெளிநடப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தாக்குவோம் என டிரம்ப் கூறியதில் கடுப்பான ஈரான், வெளிநடப்பு செய்ததாக வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சுவிட்சர்லாந்து விரைந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி சுமுகமாகப் போகவில்லை.

ஈரான் வெளிநடப்பு
லெபனான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய சில கருத்துக்களால் அதிருப்தி அடைந்த ஈரான் குழுவினர், கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்துவிடவில்லை என்றும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்றார். ஈரான் தரப்பில் அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருக்கு இடையே கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
என்ன காரணம்!
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, லெபனானில் நிலவும் போர்ச் சூழல் குறித்து ஈரான் தனது கவலையைத் தெரிவித்தது. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது. ஏற்கனவே எட்டப்பட்ட 14 அம்ச ஒப்பந்தத்தின்படி, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற விதியை அமெரிக்கா நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியது. லெபனானில் போர் நிறுத்தப்பட்டால் மட்டுமே மற்ற விவகாரங்கள் குறித்துப் பேச முடியும் என்று ஈரான் தூதுக்குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
என்ன நடந்தது
சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தளர்த்துவதற்கான ஒரு வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டதாகவும், கத்தார் நாட்டின் உதவியுடன் முடக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
டிரம்ப்
இருப்பினும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்தால் ஆத்திரமடைந்த ஈரான் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளியேறினர். அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் காலிபாஃப் எச்சரித்தார்.

