டிரம்ப் சொன்னது நடந்துவிட்டது..!! ஈரானின் பழிக்கு பழி பட்டியலில் முதலிடத்தில் டிரம்ப் பெயர்..!!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் மக்கள் கொதித்தெழுந்தனர். கமேனி கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் உச்சபட்ச தலைவராக பொறுப்பேற்றார்.
அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு கிட்டதட்ட 4 மாதங்களுக்கு பிறகு தான் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் கடந்த மாதம் தான் அமைதிக்கு வந்தது. இருதரப்பு போர் நிறுத்தம் செய்து கொண்டதை அடுத்து கமேனி உடல் நல்லடக்க நிகழ்வு நடந்தது. இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சென்றனர், லட்சக்கணக்கான ஈரான் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில் தான் ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முட்டி கொள்ள தொடங்கியுள்ளன. ஹார்முஸ் பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்ட நாட்களாகவே ஈரான் என்னை படுகொலை செய்ய திட்டமிடுகிறது, ஈரானின் முதல் இலக்கே நான் தான் என கூறி வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் ஈரானில் வெளிவரும் ஒரு நாளிதழ், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை பழிவாங்குவதற்கான இலக்குகளாக பட்டியலிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) என்ற நாளிதழ், சனிக்கிழமை தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் கமேனி படுகொலைக்கு பழிக்கு பழி வாங்கப்பட வேண்டியவர்கள் என ஒரு இன்ஃபோகிராஃபிக் வெளியிட்டது. அதில் மொஜ்தபா கமேனியின் அறிக்கையுடன், பழிவாங்கப்பட வேண்டிய 13 பேரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், இந்த நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை அச்சு பதிப்பில் இந்த செய்தி இடம்பெறவில்லை, இணையதள பக்க செய்தியில் மட்டுமே இது வந்தது. இதன்படி ஈரானின் முதல் இலக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளார். அடுத்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக தந்தையின் இறுதிச் சடங்கிற்கு பிறகு தனது முதல் அறிக்கையை வெளியிட்ட மொஜ்தபா கமேனி, பழிவாங்குவது என்பது தவிர்க்காமல் நிறைவேற்றப்பட வேண்டும். குற்றவாளிகள், அமைதியான மரணம் என்ற தங்கள் ஆசையை அடைய முடியாது என கடுமையாக எச்சரித்திருந்தார்.
போர் காலத்தில், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கத் தவறியதோடு, அமெரிக்க ராணுவ விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதித்ததால் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என ஈரானின் அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.
அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட போது நடந்த தாக்குதலில் அவரது மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் பொதுவெளியில் தென்பட வில்லை, தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்கவில்லை.
