International
oi-Nantha Kumar R
அம்மன்: அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் நடத்திய தாக்குதலில் ஜோர்டானில் நிறுத்தி வைக்கப்பட்ட அமெரிக்காவின் போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளன.

ஈரான் – அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. போர் முடிவடைந்தாலும் கூட இருநாடுகளும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இதனால் ஈரான் கடும் கோபமடைந்தது.
இந்நிலையில் தான் அமெரிக்காவை பழிதீர்க்கும் வகையில் ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம், ராணுவ தளம், கப்பற்படை தளம் உள்ளன. அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் இடையே நல்ல உறவு உள்ளது.
குறிப்பாக ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இங்கு டஜன் கணக்கில் அமெரிக்கா தனது போர் விமானங்களை நிறுத்தி உள்ளதோடு, தேவைப்படும் நேரங்களில் அந்த போர் விமானங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் இரவில் திடீரென்று ஈரான், ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தை நோக்கி குறிவைத்து தாக்கியது. இதில் வார்தோக் எனும் ஏ-10 தண்டர்போல்ட் போர் விமானம் கடும் சேதமடைந்தது. இந்த விமானத்தின் இறக்கை துண்டிக்கப்பட்டது. இதுதவிர எஃப் -15 எஸ் ரகத்தை சேர்ந்த 8 விமானங்கள் லேசாக சேதமடைந்துள்ளன.
இதனை அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமாக உள்ள சிபிஎஸ்-ஸின் நிருபர் ஜெனிபர் ஜேக்கப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான சில போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன. ஏ-10 எனும் வார்தோக் போர் விமானத்தின் இறக்கை சேதமடைந்துள்ளது. ஏறக்குறைய எப்-15எஸ் ரக போர் விமானங்கள் 8 லேசாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைகள் ஈரான் தாக்குதல்களுக்கு பதிலடியாக 30க்கும் மேற்பட்ட ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை ஏவியது.
இந்த ‘ஓவர்நைட்’ மோதலுக்கு முக்கிய காரணமே இந்த அமெரிக்க கடற்படை கப்பலை முதலில் ஈரான் குறிவைத்தது தான். இதனால் அமெரிக்கா, ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை அழித்தது. இதற்கு பதிலடியாக ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தாக்குதல் நடத்தினர். 8 எண்ணெய் கப்பல்கள் மற்றும் 2 போர்க்கப்பல்கல்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த தாக்குதல் நடவடிக்கை என்பது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதோடு, இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

