Last Updated:
பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்ததற்கான மாற்றுத் சான்றிதழை வாங்குவதற்காக வந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆசிரியர் ஒருவரை பள்ளியின் முன்னாள் மாணவன் கத்தியால் குத்திய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் லிட்டில் ப்ளவர் என்ற பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்ததற்கான மாற்றுத் சான்றிதழை வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று 2023ம் ஆண்டு வரை தான் படித்ததற்கான டி.சி சான்றிதழை கொடுக்கும்படி கேட்டுள்ளார். டிசி வேண்டும் என்றால் கட்டணத்துடன் விண்ணப்பிக்கும்படி பள்ளி முதல்வர் கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த மாணவர் “என்னை தேர்வில் பெயில் ஆக்கியது மட்டுமின்றி கட்டணம் வேறு கேட்பீர்களா? அதெல்லாம் கொடுக்க முடியாது. உடனே டிசியை கொடுங்கள்” என வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். மேலும் தான் 2023ம் ஆண்டு தேர்வில் தோல்வியடைய குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்று கூறி தகராறு செய்ய ஆரம்பித்தார். அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவர், நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் மார்பிலேயே குத்திவிட்டார்.
உடனே மிரண்டு போன ஆசிரியர் மாணவனிடமிருந்து விலகி பின்வாங்கினார். அறைக்குள் இருந்த ஆசிரியரும் முதல்வரும் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டுள்ளனர். அப்போது பள்ளி ஊழியர் ஒருவர் உள்ளே வந்து தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியை காட்டி மிரட்டி வெளியே போகுமாறு அந்த மாணவர் கூறி அனுப்பியிருக்கிறார்.
அதற்குள் அங்கு பள்ளி ஊழியர்கள் பலரும் கூடிவிட கத்தியை காட்டி மிரட்டியபடி அந்த முன்னாள் மாணவர் தப்பியோடி விட்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆசிரியர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியை அந்த மாணவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருந்தான் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் பெயர் விஷால் துஷிங் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் மாணவனைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் ஆசிரியர் ஒருவரை பள்ளியின் முன்னாள் மாணவன் கத்தியால் குத்திய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


