ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
சந்தேகநபர் அடையாளம்
அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் காவல்துறையினர் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் உதவி கோரல்
இந்தக் கொடூரக் கொலையைச் செய்த சந்தேகநபரை விரைவில் கைது செய்வதற்காக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.

எனவே, இந்த சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
-
ஹட்டன் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர – 071-8591114 - ஹட்டன் தலைமையக காவல்துறை பிரதம ஆய்வாளர் – 071-8591117
-
ஹட்டன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி – 071-8593163
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

