Last Updated:
மத்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், கலந்தாய்வு மற்றும் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முற்றிலும் தகுதி மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்றும், போலி வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஜிப்மர் நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையானது முற்றிலும் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில், தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே நடைபெறுகிறது. மத்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், கலந்தாய்வு (Counselling) மற்றும் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதற்கான நடைமுறைகளை நீட், ஐஎன்ஐ-சிஇடி, ஐஎன்ஐ-எஸ்எஸ் போன்ற தேசிய அளவிலான அதிகாரப்பூர்வ அமைப்புகள் மட்டுமே முழுமையாக மேற்கொள்கின்றன. ஜிப்மரில் பணியாற்றும் தற்போதைய ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், முகவர்கள், இடைத்தரகர்கள் அல்லது ஜிப்மர் ஊழியர்களின் உறவினர்கள் என எவராக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை நடைமுறைக்கு வெளியே எந்தவொரு பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கையை ஏற்பாடு செய்யவோ, செல்வாக்கு செலுத்தவோ அல்லது உறுதி செய்யவோ சட்டப்பூர்வமாக எந்தவித அதிகாரமும் இல்லை.
எனவே, மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் தரும் போலியான வாக்குறுதிகளை நம்பி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் மோசடி, ஆள்மாறாட்டம் அல்லது ஏமாற்று நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஜிப்மர் நிர்வாகம் சட்டப்பூர்வமாகப் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


