விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுக்கு அருகில் பயணிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 270 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸின் கைரேனியா (கிர்னே) நகரிலிருந்து துருக்கியின் தாசுகு நகரை நோக்கிப் பயணித்த ‘பிலோ டெனிஸ்சிலிக்’ நிறுவனத்துக்குச் சொந்தமான கேடமரான் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேனியா நகரிலிருந்து சுமார் 5 முதல் 7.5 கிலோமீற்றர் தொலைவில் நடுக்கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென படகுக்குள் நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கப்டன் உடனடியாக படகை கரையை நோக்கித் திருப்ப முயற்சித்துள்ளார். எனினும், கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பாரிய அலையின் தாக்கத்தில் படகு முழுமையாகக் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் படகுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடலில் தத்தளித்த பயணிகள் மற்றும் படகின் பணியாளர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக கைரேனியா துறைமுகத்தில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் நிக்கோசியா தூதர் அலி முராத் பாஸ்கெரி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

