சேரியில்லா நகரங்கள்: விஜய் கையில் எடுக்கும் மாபெரும் திட்டம்.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உடனான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2031 ஆம் ஆண்டுக்குள் சேரியில்லா நகரங்கள் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவாக ஆலோசனை செய்தார்.
முதல்வர் விஜய் ஜூலை 2 ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரையில் ஒவ்வொரு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதன் நிர்வாக குழுக்கள், உயர் அதிகாரிகளுடன் சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பில் இத்துறை செய்ய வேண்டிய திட்டங்கள், இதற்கு இருக்கும் பிரச்சனைகள், தடைகள், முக்கிய இலக்குகளை அடைய வேண்டியதற்கான பாதைகள் என முழுமையான ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதன் அடிப்படையில் தான் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் பெருநகரங்களில் இருக்கும் ஏழை மக்களுக்கு தரமான மற்றும் நிரந்தர வீட்டுகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த மாபெரும் இலக்கை எப்படி அடைய முடியும், அதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் எதிர்கால நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு கட்டுமானத்திற்கான ஒப்புதலை சிங்கிள் விண்டே சிஸ்டம் மூலம் எளிதாகவும், வேகமாகவும் அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கட்டட அனுமதி அளிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தி விரைவுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி துறை அமைச்சகம் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நிர்வாகம் கோயம்புத்தூரின் முக்கிய மைய பகுதியான ரேஸ் கோர்ஸ்-ல் சுமார் 9.71 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் வாடகை வீடு திட்டத்தின் கீழ் அப்பார்ட்மென்ட் ஸ்டைல் வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பி.ராஜ்குமார் தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் இதற்கான உத்தரவை விடுத்தார். அரசுக்கு சொந்தமாக இப்பகுதியில் 3.3 ஏக்கர் + 6.41 ஏக்கர் என இரண்டு இடங்கள் உள்ளது, இந்த இடத்தில் அப்பார்ட்மென்ட் மாடலில் பொதுமக்களுக்கான வாடகை வீட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்று முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாக துறையில் இன்று 50க்கும் அதிகமான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட முக்கியமான காரணம் டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தான் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக பல டெண்டர்கள் வெளியிடப்பட்டு 1-4 நாட்களுக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு முடிக்கப்பட்டு டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
