சூறாவளியில் தப்பித்த ஐடி நிறுவனங்கள்.. அமெரிக்காவில் அடித்த எச்சரிக்கை மணி.. இந்தியாவில் பணமழை.. எப்படி?!
இந்திய ஐடி சேவை துறைக்கு வில்லனாக இருந்த ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்துக்கள் தொடர்ந்து அதிகமாகி வரும் வேளையில், இதன் மேம்பாட்டு வேகத்தை குறைத்து ஆபத்தான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆந்திரோபிக், ஓப்பன்ஏஐ, எக்ஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் விளைவாக ஐடி சேவைத்துறை பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தடாலடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் ஐடி துறை நிறுவன பங்குகள் மட்டும் அதிரடியான உயர்வை பதிவு செய்து 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

ஏஐ துறையில் ஏற்படும் சரிவு இந்திய ஐடி சேவை துறைக்கு சாதகமாக மாறி வருகிறது, இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு ஒட்டுமொத்த இந்திய பங்குச்சந்தைக்கு எதிராக மாறி வருகிறது. மத்திய கிழக்கு முழுவதிலும் போர் தாக்குதல் நடந்து வரும் காரணத்தால் பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி பத்திர சந்தையில் குவிந்து வருகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் ஹெச்சிஎல் டெக் நிறுவன பங்குகள் அதிகப்படியாக 3.98 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து இன்போசிஸ் 3.64 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.31 சதவீதமும், டிசிஎஸ் 2.18 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த ஐடி பிரிவில் பார்க்கும் போது ஈமுத்ரா 19.99 சதவீதம் வளர்ச்சி அடைந்து அதிரடி கிளப்பியுள்ளது.
இதை தொடர்ந்து குவிக்ஹீல் 8.22 சதவீதமும், சோனாட்டா 5.87 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐடி சேவை துறைக்கு ஏஐ தொழில்நுட்பம் எதிரியாக இருந்தாலும் இத்துறையில் தனது வர்த்தகத்தையும், திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஏஐ வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமாக டிசிஎஸ்-ல் 604 வேலைவாய்ப்புகள், இன்போசிஸ்-ல் 1340 வேலைவாய்ப்புகள், HCLTech-ல் 1376 வேலைவாய்ப்புகள், விப்ரோ-வில் 350-க்கும் அதிகமான AI சார்ந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. டெக் மஹிந்திராவில் வெளியிடப்பட்ட 61 பணிகளில் 29 பணிகள் AI தொடர்புடையவை.
ஆனால் இந்த பணிகள் சாதாரண சாப்ட்வேர், டேட்டா, கிளவுட், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் பணியாகவே உள்ளதாகலும், நிறுவனங்கள் வெறுமனே ஏஐ திறன்களை சேர்ப்பதாகவும் கருத்து நிலவுகிறது. இதேபோல் இந்தியாவில் இன்னும் முழுமையா ஏஐ வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

