இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதனைத் தடுப்பதற்காக சீனாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான கூட்டுச் சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலங்கையின் வெளிவிவகார, நிதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கை
அத்துடன், இரு நாடுகளினதும் சட்ட நடைமுறைப்படுத்தல் முகவர் நிறுவனங்களுக்கு இடையிலான நடைமுறை ரீதியான ஒத்துழைப்பும் வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகளின் போது, பல சட்டவிரோத சூதாட்ட மற்றும் மோசடி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு, பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சந்தேகநபர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில சீன பிரஜைகள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு
எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு கடுமையானது, சீனப் பிரஜைகள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவது அல்லது அவற்றில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைதாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.
சீனாவும் இலங்கையும் இணைந்து இந்த குற்றவியல் வலையமைப்புகளை அடக்குவது, சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மற்றும் அவர்களின் நிதி மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உடைப்பதன் மூலம், இரு நாட்டு மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்க முடியும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

