Last Updated:
வைபவ் போன்ற திறமையான வீரர்களை ‘அதிகப்படியாகக் கோச்சிங் செய்து’ அவர்களின் இயல்பான ஆட்டத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.
இந்திய அணியின் 15 வயதான இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷியை 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில், இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் பாரூக் என்ஜினியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரோஹித் சர்மாவுடன் வைபவ் சூரியவன்ஷி தொடக்க வீரராகக் களம் இறங்க வேண்டும் என்றும், சுப்மன் கில்லை 4-வது வரிசையில் களம் இறக்க வேண்டும் என்றும் அவர் புதிய பேட்டிங் வரிசையைப் பரிந்துரைத்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற வைபவ்வின் ஆட்டம், முன்னாள் வீரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்துப் பேசிய பாரூக் என்ஜினியர், “ரோஹித் சர்மா விளையாடும் வரை அவருடன் லெஃப்ட் -ரைட் காம்பினேஷனாக வைபவ் சூரியவன்ஷி தொடக்க வீரராகக் களம் இறங்குவதே சிறந்தது.
வைபவ் பவர்-ப்ளே ஓவர்களில் களத்தின் பெரிய இடைவெளிகளைப் பயன்படுத்தி அதிரடியாக ஆடக்கூடியவர். விராட் கோலி 3-வது இடத்திலும், அணியின் மிகச்சிறந்த பேட்டரான சுப்மன் கில் 4-வது இடத்திலும் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம்பெறும்” என்று தெரிவித்தார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வைபவ் போன்ற திறமையான வீரர்களை ‘அதிகப்படியாகக் கோச்சிங் செய்து’ அவர்களின் இயல்பான ஆட்டத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.
“மேற்கிந்தியத் தீவுகளின் லெஜெண்ட் விவ் ரிச்சர்ட்ஸ் போல வைபவ் ஒரு இயற்கையான திறமைசாலி (Genius). அவரை கிரிக்கெட் புத்தக விதிகளுக்குள் அடைக்காமல், அவரது இயல்பான அதிரடி ஆட்டத்திற்கு மதிப்பளித்தால் இந்திய அணிக்கு அவர் மிகப்பெரிய சொத்தாக மாறுவார்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


