கோலாலம்பூர்:
ஜார்ஜ்டவுனிலுள்ள லெபு சுங்கை பினாங்கு 7 பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில், காரின் உள்ளே 62 வயது முதியவர் ஒருவர் இன்று (செப்டம்பர் 3) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இன்று மாலை 6.59 மணியளவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்குள் முதியவர் ஒருவர் உணர்வின்றி மயங்கிக் கிடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாக வடகிழக்கு மாவட்டப் போலிஸ் தலைமை அதிகாரி உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் சோதனையிட்டதில், அப்பகுதியைச் சேர்ந்த அந்த 62 வயது முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையிலும், சடலத்தைச் சோதனையிட்டதிலும் இச்சம்பவத்தில் சந்தேகப்படும்படியான குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அப்துல் ரோசாக் கூறினார்.
இச்சம்பவம் குறித்துப் போலிசார் திடீர் மரணம் என வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



