நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்தி, கிழக்கு, மத்தி, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-_50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள தாழமுக்கம் கடந்த 25ஆம் திகதி நள்ளிரவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 410 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.
இத்தொகுதி வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு மிக அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாழமுக்க தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதேவேளை இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. தமிழக கடலோர மாவட்டங்களில் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி வரை மழை நீடிக்குமென்று கூறப்படுகின்றது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாலேயே இலங்கையிலும், தமிழக கரையோரப் பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றது.
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நேற்று நகர்ந்து கொண்டிருந்தது.
திருகோணமலையிலிருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 800 கிலோமீட்டர் தொலைவிலும் தாழமுக்கம் நேற்று நிலைகொண்டிருந்தது.
இங்கிருந்து வடக்கு-, வடமேற்கு திசையில் தமிழகப் பகுதிக்கு நகர்ந்து இன்று 27 ஆம் திகதி அங்கு புயலாகத் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகக் கரையோரங்கள் பாதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
The post சீரற்ற காலநிலை தொடருவதால் அனர்த்த முன்னெச்சரிக்கை அவசியம்! appeared first on Thinakaran.

