விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இம்மாதம் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனு மீதான தீர்ப்பு
அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நழலையிலேயே சந்தேகநபரான நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ, இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு ஒன்றை தனது கட்சிக்காரர் பெற்றுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அவர் நீதிமன்றத்தில் பின்வருமாறு சமர்ப்பித்தார்: எனது கட்சிக்காரருக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து விஜயம் செய்வதற்கான அழைப்பு கிடைத்துள்ளது.
இந்த விஜயத்திற்கான திகதிகள் செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 1 வரை ஆகும். மேலும், ஹங்குரன்கெத்த பொத்குல் விகாரையின் தலைமைத் தேரர், செப்டம்பர் 26 அன்று அந்த விகாரையில் நடைபெறவுள்ள ‘கோத’ (கோபுர உச்சி) ஸ்தாபிப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு எனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு
இந்த ஊர்வலம் தலதா பெரஹெராவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
எனது கட்சிக்காரர் இதில் கலந்துகொள்ளத் தவறினால், அது தலைமைத் தேரருக்குச் செய்யப்படும் அவமரியாதையாக அமையும்.
இந்த முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

