“சிறைத்தண்டனை என்பது ஒருவரது சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவரது கௌரவத்தைப் பறிப்பதற்கல்ல” என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் வெறும் நெருக்கடி கால மேலாண்மையுடன் நின்றுவிடாமல், நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அமைதியின்மை மற்றும் மோதல்கள் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில வார இடைவெளிக்குள் சிறைச்சாலையில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய மோதல் இதுவெனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இந்தச் சம்பவங்கள் வெறும் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், இவை சிறைச்சாலை நிர்வாகத்தின் சீர்குலைவு, மேலாண்மை குறைபாடு மற்றும் பாரிய கட்டமைப்புச் சிக்கல்களைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு ஏன் இன்னும் நிரந்தரமான ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்புப் படையினரை மேலதிகமாக ஈடுபடுத்துவது தற்காலிகத் தீர்வாக அமையுமே தவிர, அது பிரச்சினையின் அடிப்படை வேர்களைத் தீர்க்காது என அவர் வாதிட்டுள்ளார்.
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்:
குறிப்பாக சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான இடநெருக்கடி, போதிய வசதிகள் மற்றும் சுகாதாரச் சேவைகள் இல்லாமை, ஆக்கபூர்வமான புனர்வாழ்வுத் திட்டங்கள் பற்றாக்குறை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “சிறைத்தண்டனை என்பது ஒருவரது சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவரது கௌரவத்தைப் பறிப்பதற்கல்ல” என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் வெறும் நெருக்கடி கால மேலாண்மையுடன் நின்றுவிடாமல், நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

