மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மதுரையில் நடந்த கட்சி மாநாட்டில் கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, சிபிஎம் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அசோக் தவாலேவை தேர்வு செய்ய முன்மொழிந்த நிலையில், Polit Bureau உறுப்பினர்கள் அதிகமானோரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எம்.ஏ.பேபி. 70 வயதான மரியம் அலெக்சாண்டர் பேபி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பிறந்தவர். பள்ளி காலத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்த பேபி, கேரள மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
பின்னர் அந்த அமைப்பு இந்திய மாணவர் சங்கமாக மாற்றப்பட்ட நிலையில், அதன் தலைவராகவும் செயல்பட்டார். தொடர்ந்து சிபிஎம் கட்சியின் இளைஞர்கள் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராக தேர்வானார். எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் போராட்டம் நடத்தி சிறைக்கும் சென்றார். 1986ம் ஆண்டு 32 வயதில் மாநிலங்கள் அவை உறுப்பிரான பேபி தேர்வு செய்யப்பட்டார். 1999ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியில் பேபி சேர்க்கப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் அக்கட்சியின் முகமாக வளர்ந்தார்.
2006ம், ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குண்டாரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பேபி, விஎஸ் அச்சுதாநந்தன் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். தன்னை ஆத்திகவாதி என அறிவித்துக்கொண்ட பேபி, அமைச்சராக இருந்த போது கடவுள் மறுப்பு கொள்கை குறித்து பள்ளி புத்தகத்தை சேர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. கேரள பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வந்த எம்.ஏ.பேபி,
கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கேரளாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச கலை கண்காட்சியை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் எம்.ஏ.பேபி. 2011ம் ஆண்டு தனது தொகுதியிலேயே மீண்டும் வெற்றிப்பெற்ற எம்.ஏ.பேபி, 2014ம் ஆண்டு கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கேரளாவை சேர்ந்த நம்பூதிரிபாத் இருந்த போது, தேசிய அளவில் கட்சி பணிகளில் அதிகம் ஈடுபட்டார் பேபி. நம்பூதிரிபாத்துக்கு பிறகு கேரளாவில் இருந்து தேசிய பொதுச்செயலராக தேர்வாகி உள்ள 2வது நபரான எம்.ஏ.பேபி, அந்த பதவியை பெற்ற முதல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராவார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலத்துடன் இருக்கும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படும் நிலையில், தலைவர்களை ஒன்றிணைப்பது, கூட்டணி உள்ளிட்டவை பேபிக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
April 06, 2025 9:28 PM IST
சிறுபான்மை சமூகத்தில் இருந்து சிபிஎம் தேசிய பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ள முதல் நபர்… யார் இந்த எம்.ஏ பேபி?

