ஒரு நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ஆட்சேர்ப்பு என்பது தகுதி, திறமை மற்றும் வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த காலங்களில் அரசியல் உயர்பீடம் என்பதற்காக ஒருவருக்காக ஆட்சேர்ப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு தகுதி அளவுகோல்கள் தளர்த்தப்பட்டு தகுதியுடன் விண்ணப்பித்த ஏராளமான இளைஞர்களின் உரிமையை பறித்த செயலை ராஜபக்சர்களின் ஆட்சி அதிகாரம் அரங்கேற்றியுள்ளது.
அத்தோடு, இங்கு ஒரு கடற்படைத் தளபதியின் உயர்ந்த பொறுப்பு புறக்கணிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புப் படைகளின் ஒழுக்கம், நியாயம் மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பை உறுதிப்படுத்தப்படாத முறைக்கேடு அரங்கேரியுள்ளது.
தகுதிகள் இன்றி ஆட்சேர்ப்பு
ஒரே ஒருவருக்கு நன்மை கிடைக்கும்படி தகுதி அளவுகோல்களை மாற்றியதாகவும், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறப்பு சலுகைகள் வழங்கியதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோட மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் கவலைக்குரியவை.

இது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல. தகுதியுடன் விண்ணப்பித்த பல இளைஞர்களின் வாய்ப்பை பறித்த அநீதியாகும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை தேவையான தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்த்தது தொடர்பான விசாரணைகளின் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகோடா குறித்து நேற்று நீதிமன்றில் பின்வருமாரு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அதிகார வரம்பின் ஆதிக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஆணைக்குழுவின் சார்பில் அதன் பிரதிப் பணிப்பாளர் ருவினி விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை
“நீதிபதி அவர்களே, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பை மறுத்து, யோஷித ராஜபக்சவை தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்த்தது குறித்த முறைப்பாடே இது.
இந்த சந்தேக நபர், பிரித்தானிய ரோயல் கடற்படைக் கல்லூரியில் நடத்தப்பட்ட கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு, இலங்கை குடிமகனாக இருந்த யோஷித ராஜபக்சவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த நேரத்தில் இவர் கடற்படையின் தளபதியாக இருந்தார். யோஷிதவை கடற்படையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, அவர் சேர்க்கப்படவிருந்த நிர்வாகப் பயிற்சிப் பிரிவிற்கான தகுதி அளவுகோல்களை இரண்டு முறை மாற்றியுள்ளார்.
சரிபார்க்கப்படாத கல்வி தகுதி
மற்ற விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிகளைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டபோதிலும், யோஷிதவின் கல்விச் சான்றிதழ்கள் அனுப்பப்படவில்லை.

முதல் முறையாகத் தகுதிகள் மாற்றப்பட்டு, செய்தித்தாள் விளம்பரங்கள் வெளியிடப்பட்ட பின்னரும் கூட, குறைந்தபட்சத் தகுதியாக இருந்த சாதாரண நிலை சிங்களப் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறும் தகுதியை யோஷித ராஜபக்ச பெற்றிருக்கவில்லை.
அவர் சாதாரணத் தேர்ச்சியையே பெற்றிருந்தார்.” அல்லது சிங்களப் பாடத்தில் ‘S’ தேர்ச்சி. பின்னர், இந்தச் சந்தேக நபரால் யோஷித ராஜபக்சவை இரண்டாவது முறையாகச் சேர்க்க முடிந்தது. அவரது தகுதிகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு அளவுகோல்கள் மாற்றப்பட்டுள்ளன” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, “சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்கு அரசுத் தரப்புக்கு ஆட்சேபனை உள்ளதா எனக் கேட்டு, “வழக்கின் உண்மைகளைப் பார்க்கும்போது, ஒரு குற்றம் இழைக்கப்பட்டுள்ளது எனச் சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருப்பது தெளிவாகிறது.
தற்போதுள்ள பிரச்சினை பிணை தொடர்பானது. சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்கு அரசுத் தரப்புக்கு ஆட்சேபனை உள்ளதா?” என்று வினவினார்.
நீதிபதியின் விசாரணைக்கு பதிலளித்த விசாரணை அதிகாரி, விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், மேலும் பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதால், அதுவரை சந்தேக நபருக்கு பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
பிணை கோரிக்கை
அப்போது, சந்தேக நபரான முன்னாள் கடற்படைத் தளபதிக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் பிணை கோரினார்.

அவர் தனது வாதத்தை பின்வருமாறு முன்வைத்தார்:
“நீதிபதி அவர்களே, போரின் போது, குறைந்த எண்ணிக்கையிலான மக்களே இராணுவத்தில் சேர்ந்தனர். பாதுகாப்பு மன்றம் ஆள்சேர்ப்பை அதிகரிக்க முடிவு செய்தது.
இராணுவத்திற்கு 50,000 பேரும், கடற்படைக்கு 25,000 பேரும், விமானப்படைக்கு 15,000 பேரும் சேர்க்கப்பட்டனர்.
நாட்டின் ஜனாதிபதியின் மகன் இராணுவத்தில் சேர்ந்தது, மற்ற பெற்றோர்களையும் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் தூண்டியதால் இந்த ஆள்சேர்ப்பு நடைபெற்றது.
சந்தேக நபாக குறிப்பிடப்பட்டுள்ளவர் திருமணமானவர். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. அவரது மனைவி கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.
அவர் காவலில் வைக்கப்பட்டால், அவரைப் பார்த்துக்கொள்ள குடும்பத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அவருக்கு பிணை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

