Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள துருவ் ஜுரெலுக்கு இடம் கொடுக்க கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் பயிற்சி போட்டியில் ஆடி இருந்தனர். தற்போது சிறிய ஓய்வுக்கு பின் மீண்டும் இந்திய அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. இலங்கை மண்ணில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ளது.

அதேபோல் பேட்டிங்கிலும் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை நம்பியே இந்திய அணி உள்ளது. இந்த நிலையில் சாய் சுதர்சன் காயம் காரணமாக வெளியேறியதால், அந்த இடத்திற்கு சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டார். சிறப்பான ஃபிட்னஸ் உடன் இருக்கும் சர்ஃபராஸ் கான் ஸ்பின்னர்களை விளாசி தள்ளுபவர். இதனால் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரின் முடிவு வேறாக இருக்கிறது. இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருக்கும் துருவ் ஜுரெல் நீண்ட காலமாக இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். பெரிதாக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இதனால் இலங்கைக்கு எதிரான இந்திய ஏ அணி சுற்றுப்பயணத்தில் துருவ் ஜுரெல் களமிறக்கப்பட்டார்.
சிறப்பாக ஆடி இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்ற துருவ் ஜுரெலுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சியில் துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டிருக்கிறார். சர்ஃபராஸ் கானும் இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும், அவருக்கான வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் படிக்கல் நம்பர் 3 பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார். கேஎல் ராகுல் நிரந்தர வீரர்.. யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்.. இதனால் நம்பர் 4ல் சுப்மன் கில், ரிஷப் பண்ட் நம்பர் 5ல் விளையாடுவதால், சர்ஃபராஸ் கான் லோயர் மிடில் ஆர்டரில் தான் விளையாட முடியும். இதனால் சர்ஃபராஸ் கான் பென்ச் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.



