கோலாலம்பூர்:
கோலா லிப்பிஸ் – குவா மூசாங் சாலையில் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் முறையான பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய 9 வங்காளதேச ஆண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 31) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி சூப்ரண்டண்ட் சிக் சூன் ஃபூ கூறினார்.
வெள்ளை நிற ‘பெரோடுவா அல்ஸா’ ரக காரில் பயணித்த இவர்களின் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததைத் தொடர்ந்து, பெர்தாம் போலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போலிஸ் படையினர் அவர்களை மறித்துச் சோதனை செய்தனர் என்றார்.
நேற்று காலை 11.30 மணியளவில் நடத்தப்பட்ட அந்த சோதனையில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அந்த 9 வங்காளதேச ஆண்களிடமும் மலேசியாவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான எந்தவொரு கடப்பிதழோ அல்லது பயண ஆவணங்களோ இல்லை என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்துக் குடிவரவுச் சட்டம் 1959/63-இன் (சட்டம் 155) பிரிவு 55E, பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களின் குடிநுழைவு நிலையை முழுமையாகச் சரிபார்க்கவும், சட்டவிரோதமாக அவர்களை அழைத்து வந்ததில் தொடர்புடைய பிற நபர்களைக் கண்டறியவும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



