கோயம்புத்தூர் அவினாசி சாலையில் இப்படியொரு திட்டமா..? கோவையின் அடையாளமாக மாறப்போகும் பிரம்மாண்டம்..!
கோயம்புத்தூர் நீண்ட காலமாக தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக இருந்தாலும், கடந்த 5 வருடத்தில் பெங்களூருக்கு இணையாக ஐடி நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கு வண்டிகட்டிக்கொண்டு வந்த காரணத்தால் ஒட்டுமொத்த வர்த்தக சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது. எப்போது ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் வர்த்தக சந்தையும், தேவையும் மாறும்.
அந்த வகையில் தற்போது கோயும்புத்தூர் உயர்நிலை வர்த்தக சந்தையாக மாறியிருக்கும் காரணத்தால் ஆடம்பர ரீடைல் பிராண்டுகள் முதல் பிரபலமான வெளிநாட்டு பிராண்டுகள் வரையில் கோயம்புத்தூரில் தனது கடைகளைத் திறந்ததுள்ளது. இதனால் ஆடம்பர மற்றும் அதிநவீன ஷாப்பிங் தளத்திற்கான தேவை உருவானது.

இதை உணர்ந்த பிரபல மால் கட்டுமான மற்றும் நிர்வாக நிறுவனமான ஃபீனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரீயா ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அவினாசி சாலையில் கடந்த ஆண்டு சுமார் 9 ஏக்கர் நிலத்தை 370 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இங்கு முதலில் உயர்தர ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்க பிரம்மாண்ட மால் கட்டுவதற்கு மட்டுமே திட்டமிட்ட ஃபீனிக்ஸ் மில்ஸ் தற்போது 5 ஸ்டார் ஹோட்டல் உடன் மிகப்பெரிய திட்டமாக மேம்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மால் + ஹோட்டல் + சினிமா தியேட்டர் என மாபெரும் திட்டமாக உருவாக உள்ளது. இதில் 2 தளத்திற்கு பேஸ்மென்ட், 2 தரைதளம், 5 மாடிகள் என மால் ஆக கட்டமைக்கப்பட உள்ளது.
6 முதல் 15ஆம் மாடி வரையில் சுமார் 534 அறைகள் உடன் 5 ஸ்டார் ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. மால் மற்றும் ஹோட்டல் என அனத்தையும் சேர்த்து சுமார் 70 மீட்டர் உயரத்தில் 17 மாடி கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக உருவாக உள்ளது. மேலும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமான பகுதி மட்டும் 23 லட்சம் சதுர அடியாகும்.
இந்த திட்டத்தில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், 534 அறைகள் கொண்ட இந்த புது ஹோட்டல், தென்னிந்தியா மாநிலங்களிலேயே 2வது பெரிய ஹோட்டலாகவும், இந்திய அளவில் 5வது பெரிய ஹோட்டலாகவும் அமையும் என தெரிகிறது. இது கோயம்புத்தூரின் அடையாளமாக மாறக்கூடும் அளவிலான திட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டிடத்திற்கு அருகிலேயே Radisson Blu 5-ஸ்டார் ஹோட்டல் உள்ளதால் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் அடுத்தடுத்து முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்று வரும் காரணத்தால் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பாதையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கிரேட் ஏ தரத்திலான அலுவலக இடம் கோயம்புத்தூர் முழுக்க உருவாக துவங்கியுள்ளது, இதே தொடர்ந்து தற்போது மால், பெரிய ஹோட்டல்கள் எனவும், விமான நிலைய விரிவார்க்கம், பிரேகேட் வோல்டு டிரேட் சென்டர் என உயர்தர உள்கட்டமைப்பு திட்டங்கள் அடுத்தடுத்து கோயம்பூத்துர்க்கு கிடைக்கு வருகிறது.
இறுதியாக மெட்ரோ திட்டம் மட்டும் மத்திய அரசு பச்சைக்கொடி காட்டினால் கோயம்புத்தூர் சென்னை, பெங்களூருக்கு இணையாக வளர்ச்சி அடையும்.

