இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களுள் ஒருவரும், ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவருமான விஜய்பத் சிங்கானியா தன்னிடம் இருந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் தனது மகனுக்கு கொடுத்துவிட்ட நிலையில், தந்தை, மகனுக்கு இடையேயான பிரச்சனை காரணமாக அவரை வீட்டை விட்டு மகன் வெளியேற்றினார். இதையடுத்து, முன்னாள் கோடீஸ்வரரான விஜய்பத் சிங்கானியா தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜவுளித் துறையில் முன்னணி நிறுவனமான ரேமண்ட் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அதன் பாரம்பரியமும், துணிகளின் தரமும் அதன் மீதான மதிப்பை தனித்து நிற்கச் செய்தது. தனது மாமா ஜிகே சிங்கானியாவின் மறைவுக்குப் பிறகு ரேமண்ட் நிறுவனத்தை எடுத்து நடத்திய விஜய்பத் சிங்கானியா நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறுகிய காலத்தில், ரேமண்டை ஒரு வெற்றிகரமான பிராண்டாக மாற்றிய விஜய்பத் சிங்கானியாவின் தொழில் உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்தியாவின் தற்போதைய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, மறைந்த ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கே போட்டியாக இருந்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை. ரேமண்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு கொண்டுசென்றதில் விஜய்பத் சிங்கானியாவின் பங்கு அளப்பரியது.
இவருக்கு மதுபாத் சிங்கானியா, கௌதம் சிங்கானியா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், முதல் மகனான மதுபாத் குடும்பத் தொழிலில் இருந்து விலகி இருக்கிறார். மறுபுறம், இளைய மகனான கௌதம் சிங்கானியா ரூ.9,478 கோடி மதிப்புள்ள ரேமண்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
இதையும் படிக்க: UPI PIN டெபிட் கார்டு இல்லாமல் எவ்வாறு செட் செய்வது…? படிப்படியான வழிமுறைகள் இங்கே…!
2015ஆம் ஆண்டில் ரேமண்ட் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி, தனது மகன் கௌதம் சிங்கானியாவிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு விஜய்பத் சிங்கானியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன. ரேமண்ட் குழுமத்தில் தன்னிடம் இருந்த 37 சதவீத பங்குகளை விஜய்பத் தனது மகன் கௌதமுக்கு வழங்கினார்.
பின்னர், 2017ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள குடும்பத்திற்குச் சொந்தமான ஜே.கே.ஹவுஸில் ரேமண்ட் லிமிடெட் தனக்கு டூப்ளக்ஸ் கொடுக்கவில்லை என்று விஜய்பத் கூறியிருந்தார். இதையடுத்து, தந்தை-மகன் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. 2018ஆம் ஆண்டில், மதுபாத் சிங்கானியா ரேமண்டின் தலைவர் எமரிட்டஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது ரூ.9478 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: ஆன்லைனில் பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கிளைம் நிராகரிக்கப்பட்டதா…? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி…?
பிரபல சிங்கானியா குடும்பத்தைச் சேர்ந்த விஜய்பத், ஜவுளித் தொழிலதிபராக இந்தியாவில் நன்கு அறியப்பட்டவர். மேலும், இந்திய அரசு அவருக்கு இரண்டு விருதுகளையும் வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது விமானப் பயணங்களை கருத்தில்கொண்டு, டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது மற்றும் 2006ஆம் ஆண்டு அவரது ஒட்டுமொத்த சாதனைகளுக்காக பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்பத் சிங்கானியா, புத்தகம் போடும் அளவுக்கு ஒரு பெரிய நினைவுக் குறிப்பு, தனது மைக்ரோலைட் விமானத்தின் கதை மற்றும் அவரது சுயசரிதை ஆகியவற்றை எழுதியுள்ளார். ரேமண்ட் என்பது ஜவுளி மற்றும் ஆடைத் துறைகளில் பெரும்பான்மையான தொழிலைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட குழுவாகும். எனினும், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் நுகர்வோர் பராமரிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளிலும் முன்னிலையில் உள்ளது.
March 25, 2025 6:09 PM IST

