
கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகளில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொச்சிக்கடையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192ஆவது வருடாந்த பெருவிழா, இன்று (13) பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த முக்கிய மத நிகழ்வை முன்னிட்டு, விசேட திருப்பலிகளும் புனிதரின் திருச்சொரூப பவனியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மாலை 05 மணிக்கு பிரதான பெருவிழாத் திருப்பலி நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகள் வழியாக நடைபெறவுள்ளது.
பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பவனியை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகளில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் பயணிக்கவுள்ள வாகன ஓட்டிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும், போக்குவரத்து பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், திருப்பலியில் நேரில் கலந்துகொள்ள முடியாத பக்தர்களுக்காக இன்று காலை 8.00 மணிக்கு நடைபெற்ற விசேட திருப்பலி, “Facebook St. Anthony’s Shrine Colombo 13” என்ற சமூக ஊடகப் பக்கத்தின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா, இலங்கையின் முக்கிய கத்தோலிக்க மத நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இதில் பங்கேற்பது வழமையாகும்.

