Last Updated:
மழைக்காலத்தை பயன்படுத்தி பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து, மண் பரிசோதனையின் அடிப்படையில் சமச்சீர் உரமிடல் மேற்கொண்டால் விளைச்சலும் மண்வளமும் மேம்படும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இந்த சூழலில் பயிர்களுக்கு தேவையான சமச்சீர் உரமிடலின் முக்கியத்துவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சமச்சீர் உரமிடல் என்பது பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் சரியான அளவில் வழங்கும் முறையாகும். அதாவது நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட முதன்மை ஊட்டச்சத்துகளுடன் நுண்ணூட்டச்சத்துகளையும் பயிரின் தேவைக்கேற்ப சமநிலையாக வழங்குவதே சமச்சீர் உரமிடல் ஆகும்” என்றார்.
சமச்சீர் உரமிடல் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், விளைச்சல் அதிகரிக்கும். மேலும், உரச் செலவு குறைவதோடு சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறையும். ஒரே வகை உரத்தை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தும்போது பயிர்களுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதுடன், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சமச்சீர் உரமிடல் மேற்கொள்ளும்போது பயிர்கள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களும் குறையும் என அவர் தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் மழைக்காலத்தை பயன்படுத்தி பசுந்தாள் உரப் பயிர்களான தட்டைப்பயறு, சணப்பு உள்ளிட்டவற்றை வயல்களில் விதைக்கலாம். அவை 45 நாட்கள் வளர்ந்து பூக்கும் பருவத்தில் கலப்பை மூலம் மண்ணில் மடக்கி உழுவதால், அதிலுள்ள தழைச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மண்ணுடன் கலந்து பயிர்களுக்கு பயனளிக்கும்.
இதன் மூலம் பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 16 கிலோ முதல் 32 கிலோ வரை தழைச்சத்தை பசுந்தாள் உரப் பயிர்கள் வழங்கும் என்றும் அவர் கூறினார். பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட முடியாத விவசாயிகள், வரப்பு ஓரங்களில் வளரும் வேம்பு, கிளைரிசிடியா போன்ற மரங்களின் இலை மற்றும் தழைகளை வயலில் பரப்பி மண்ணுடன் கலக்கலாம். இது மண்ணின் கரிமச்சத்து மற்றும் கனிமச்சத்தை அதிகரித்து, செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைக்க உதவும்.
மேலும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரமிட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற உரச் செலவுகளை தவிர்க்க முடியும். அதோடு மண்வளமும் பாதுகாக்கப்பட்டு, சுற்றுச்சூழலும் மேம்படும் என வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளார்.

