Last Updated:
மகா கும்பமேளாவுக்குச் செல்ல ரயிலில் இடம் கிடைக்காததால் பயணிகள் சிலர் ஏசி ரயில் பெட்டிக் கண்ணாடியை உடைத்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் படையெடுப்பதால், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இருக்கைகளில் இடம் கிடைக்காத பயணிகள் பலர், ஆத்திரத்தில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் சீட் பிடிக்க, பயணிகள் முண்டியடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம்.
அப்போது அனைத்துப் பெட்டிகளும் நிரம்பிவிட்டால் அடுத்த ரயிலில் செல்லலாம் என்றுதான் அனைவரும் நினைப்பர். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர் மாற்றி யோசித்துள்ளனர். வாரணாசியில் இருந்து சென்ற ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ரயில் என்ஜினில் ஓட்டுநரின் பகுதியில் ஏறி கதவை பூட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களை ரயில் என்ஜினில் இருந்து அப்புறப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பிகாரில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக புது டெல்லி செல்லும் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் எல்லை மீறி, கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் குளிர்சாதன வசதி கொண்ட ரயிலில் முன்பதிவு செய்து கும்பமேளா சென்ற பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பல பெட்டிகளிலும் ரயில் கண்ணாடி சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பதிவில்லா பெட்டிகளில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இடம் கிடைத்த பலர் படிக்கட்டு அருகே நின்று பயணத்தை தொடர்ந்தனர். அப்போது கீழே விழாமல் இருக்க, துணியால் இருபுறமும் கட்டி இருந்தனர். கூட்டம் நிரம்பியதால் ரயில் பெட்டியின் கதவுகளை அடைக்கப்பட்டபோது, பலர் உள்ளே இருந்தவர்களின் மீது தண்ணீரை ஊற்றினர்.
#JUSTIN பிகாரில் இருந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்ல ரயிலில் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் ஏற முயன்றதால் பரபரப்பு#MahaKumbhMela #Bihar #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/VzwXKdvalH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 11, 2025
ரயில்களில் இடம் கிடைக்காத பலர் அசாம்பாவித செயல்களில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகி இருந்தன. மகாகும்பமேளா விழாவின்போது புனித நீராட பக்தர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர்.
பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் ஸ்தம்பித்தனர். முறையான முன்னேற்பாடுகள் செய்யாததே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
February 11, 2025 3:10 PM IST


