கோலாலம்பூர்:
பஹாங், தியோமான் தீவு அருகே உள்ள ரெங்கிஸ் தீவு பகுதியில், படகில் ஏற முயன்றபோது கால் தவறி கடலுக்குள் விழுந்த 65 வயதுடைய இந்தியச் சுற்றுலாப் பெண்மணி நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை சுமார் 9.50 மணியளவில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுபரின்டென்டன் ஷரீஃப் ஷாய் ஷரீஃப் மொண்டோய் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த பெண் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சபியா ஷேக் (Sabiya Shiek, 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சபியா ஷேக் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருடன் இணைந்து, இரு ஆழ்கடல் நீச்சல் பயிற்றுனர்களின் வழிகாட்டுதலில் ‘Discover Scuba Diving’ எனும் ஆரம்பநிலைச் சாகச நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார். அந்நடவடிக்கை முடிந்ததும் அவர் படகிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். படகின் ஏணியில் அவர் ஏறிக்கொண்டிருந்தபோது, அவரது மகள் அவரது ஆழ்கடல் நீச்சல் உபகரணங்களைக் கழற்ற உதவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கால் நழுவி சபியா ஷேக் 7 மீட்டர் ஆழமுள்ள கடலுக்குள் விழுந்து மூழ்கியுள்ளார்.
உடனடியாக ஆழ்கடல் நீச்சல் பயிற்றுனர் கடலுக்குள் சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். சற்று நேரத்திலேயே சபியா ஷேக் கடலடியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அவர் தியோமான் தீவில் உள்ள தெக்கக் சுகாதார கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
தமிழ்நாட்டிலிருந்து தனது குடும்பத்துடன் மலேசியாவிற்குச் சுற்றுலா வந்த சபியா ஷேக், 4 நாட்கள் விடுமுறைக்காக நேற்று தான் தியோமான் தீவில் உள்ள ஓய்வு விடுதிக்கு வந்து சேர்ந்துள்ளார்.அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குவாந்தான், தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



