Courtesy: SIVA
கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்றிரவு சுமார் 8 மணியளவில் டிப்பர் வாகனமொன்று எரிபொருள் நிரப்புவதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், வாகனத்தை முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் சாரதியிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது பணியாளருக்கும் டிப்பர் வாகன சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற டிப்பர் வாகன சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் அங்கு இருந்த வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியும் விட்டு குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

