
பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு கிரிந்த கடற்கரையில் நீராடியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி ஒருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
கிரிந்த கடற்கரை பகுதியில் கடலில் நீராடச் சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் அலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவொன்று கிரிந்த கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பலமான கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடலில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இதில் கவலைக்கிடமான நிலையில் இருந்த ஆசிரியர் ஒருவரும், மாணவி ஒருவரும் முதலில் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஆபத்தான நிலையில் இருந்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம அடிப்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

